இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது
இர்ஷாத் ரஹ்மதுல்லா
UPDATED: Jun 18, 2024, 5:42:25 PM
இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளி நாட்டு மீன்பிடி படகுகள் நாட்டின் கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் உள்ளூர் மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலையில், இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடிப் படகுகளைக் கண்டறிந்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்று விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் மேற்கொண்டுள்ளனர்.
ALSO READ | கோழிப் பண்ணையில் தீ விபத்து.
அங்கு நெடுந்தீவுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகொன்றுடன் (01) நான்கு (04) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடிப் படகு (01) மற்றும் நான்கு இந்திய மீனவர்கள் (04) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
ALSO READ | மேற்கு வங்கத்தில் பயங்கர ரயில் விபத்து.
மேலும், 2024 ஆம் ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருபத்து நான்கு (24) இந்திய மீன்பிடி படகுகளும் நூற்று எண்பத்திரண்டு (182) இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கடற்படை ஊடக பிரிவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.