சட்ட விரோத கருக் கலைப்பு மையத்தால் பலியான பெண்.. மெடிக்கல் ஷாப்களில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சட்ட விரோத கருக் கலைப்பு மையத்தால் ஒரு பெண் உயிரிழந்ததை அடுத்து அப் பகுதியில் உள்ள மருந்தகம் மற்றும் மருத்துவ மனையை மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குனர் ரமேஷ் பாபு நேரில் ஆய்வு மேற் கொண்டிருக்கிறார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராம நத்தம் கிராமத்தில் பெரம்பலூர் மாவட்டம் மேட்டுப் பாளையத்தை சேர்ந்த வேல் முருகன்-அனிதா தம்பதியினர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஏழு வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக நான்கு மாதமாக கருவுற்று உள்ளார்.
இந்நிலையில் மூன்றாவதாக பிறக்க போகும் குழந்தை ஆணா பெண்ணா என கண்டறிய கடந்த சில நாட்களுக்கு முன்பு இராமநத்தம் வந்துள்ளனர். அப்போது கருவில் உள்ளது பெண் குழந்தை என சட்டவிரோதமாக கண்டறிந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து கடந்த 05.05.2022 அன்று இராமநத்தத்திற்கு கருக் கலைப்பு செய்ய சென்றிருக்கிறார்கள் இத்தம்பதி. அங்கு திட்டக்குடி அடுத்துள்ள கச்சி மைலூர் கிராமத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாய பிரிவின் வட்டச் செயலாளரும் மருந்தகம் உரிமையாளருமான முருகன் என்பவர் மெடிக்கல் கடை நடத்தி வருகிறார்.
அவர் தனது மெடிக்கல் கடையில் வைத்தே அனிதாவிற்கு கருக் கலைப்பு செய்து உள்ளார். கருக் கலைப்புக்குப் பின் காலையில் இருந்து அனிதா மயக்கத்தில் இருந்து உள்ளார் ரத்தப் போக்கு அதிகரித்து உள்ளது.
ஆபத்தான நிலையில் மனைவி இருந்ததால் சந்தேக மடைந்த கணவர் வேல் முருகன் இது குறித்து முருகனிடம் கேட்டுள்ளார். உடனடியாக முருகன் தனது காரில் பெரம்பலூரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க மறுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பெரம்பலூர் அரசு மருத்துவ மனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வேல் முருகன் தனது மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்க சென்ற போது முருகன் அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப் படுகிறது.
பின்னர் இரண்டு நாட்களாக அவசர சிகிச்சை பிரிவில் அனிதா சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன் தினம் 07.05.2022 அன்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
மேலும் மெடிக்கல் கடை நடத்தி வந்த முருகன் மருத்துவத் துறைக்கு சம்பந்த மில்லாத பட்டப்படிப்பு படித்ததாக கூறப்பட்ட நிலையில் அதற்கான சான்றிதழ்கள் ஏதும் மெடிக்கலில் கைப்பற்றவில்லை.
மெடிக்கல் கடையில் வைத்து சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து போலீசார் முருகனை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் பா. கணேசன்