நீதிமன்ற உத்தரவால் விவசாயியை வீட்டை விட்டு வெளியேற்றி வீட்டை பூட்டியதால் பரபரப்பு .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது60). இவர் கடந்த 2006 ம் ஆண்டு குளித்தலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட (எஸ்பிஐ) வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக ரூ.8 லட்சமும், அதன்பின்னர் ரூ.4 லட்சம் என மொத்தம் ரூ.12 லட்சம் கடன் வாங்கியுள்ளார்.
மாதாமாதம் முறையாக தவணை செலுத்திவந்த நிலையில் இடையில் பொருளாதார நெருக்கடி காரணமாக முறையாக தவணைத் தொகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரூ 7.50 லட்சம் மட்டும் செலுத்திய நிலையில் கடன் தொகையை முழுமையாக செலுத்தாததால் வங்கி நிர்வாகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு பன்னீர் செல்வத்தின் 11 ½ ஏக்கர் நிலத்தை 58 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வருவாய்துறையினர், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் நில அளவையருடன் இன்று கரும்புலிபட்டிக்குச் வந்து சம்மந்தப்பட்ட நிலத்தை அளந்தனர்.
பின்னர் பன்னீர் செல்வம் குடியிருந்த வீட்டை காலி செய்யுமாறு கூறினர். ஆனால் வீட்டை காலி செய்யமறுத்து அவரது குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேற மறுத்த நிலையில் பன்னீர்செல்வம் மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய இருவரும் தீக்குளிக்க மண்ணெண்னை கேனை எடுத்துவந்தனர்.
அவரை போலீசார் தடுக்க முற்பட்டபோது பெண் போலீசார் சிலர் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தனர். பின்னர் பன்னீர் செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றினர். பின்னர் அதிகாரிகள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வந்து வைத்துவிட்டு வீட்டை காலி செய்துபூட்டு போட்டு பூட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்