காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டத்தில் வரதர் வந்து அருள்பாலித்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவம் கடந்த மே 13 ஆம் கொடியேற்த்துடன் தொடங்கியது.
அத்திவரதர் கோவில் என அனைவராலும் அழைக்கப்படும் தேவராஜ சுவாமி திருக்கோயிலின் முக்கிய நிகழ்வான கருட சேவை மே 15 ந்தேதி அன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பின்னர் உற்சவமூர்த்திகள் காந்தி சாலை தேரடிக்குச் சுமந்து வரப்பட்டு அங்கு நிலையில் அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேரில் அதிகாலை 5.15 மணிக்கு எழுந்தருளினர்.
இதைத் தொடர்ந்து தேரின் மீது அமர்ந்திருக்கும் வரதராஜ பெருமாளை, அருகில் சென்று வழிபட காலை 6 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து 6 மணிக்கு தேர் நிலையில் இருந்து புறப்பாடு நடைபெற்றது.
அதிமுக மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், கூட்டுறவு நகர வங்கி தலைவர் பாலாஜி , தமிழக இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் தேரை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.
தேரோட்டத்தைக் காண உள்ளூர் மட்டுமன்றி சென்னை, திருவள்ளூர்,வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
இதனால் காஞ்சிபுரம் நகரம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. தேர் காந்தி சாலையில், மூங்கில் மண்டபம், காமராஜர் சாலை வழியாகச் சென்று நான்கு ராஜ வீதிகளிலும் வலம் வந்து மீண்டும் நிலைக்கு வந்தடைந்தது.
வைகாசி பிரமோற்சவத்தின் 7 வதுநாள் விழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவராஜ சுவாமி திருக்கோயில் பட்டாட்சியர்கள் கண்ணன், கிட்டு ஆகியோர் தலைமையில் மிக சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.
தேரோட்டத்தைக் காண வந்த பக்தர்களுக்கு மாவட்ட கழக செயலாளர் வி.சோமசுந்தரம் ,கழக அமைப்புச் செயலாளர், வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் சார்பிலும் கடைகள், வணிக நிறுவனங்களின் சார்பிலும் பக்தர்களுக்கு மோர், பழரசம், வெண் பொங்கல், தயிர் சாதம், புளி சாதம் , சக்கரை பொங்கல் சாம்பார் சாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.
மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் நகருக்குள் பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் வருவது தடை செய்யப்பட்டிருந்தது.
வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள் நகரின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் தாற்காலிகப் பேருந்து நிலையங்களில் பயணிகளை இறக்கிவிட்டு, அங்கிருந்தே புறப்பட வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ் விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்கள் தலைமையில் சுமார் 750 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.