கும்பகோணம் அருகே திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்ற இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் காவல் நிலையத்திற்குட்பட்ட மேல கொற்கை அம்பலக்காரத் தெரு அருகே திருமலைராஜன் ஆற்றில் உள்ள தடுப்பணையில் கும்பகோணம் ஐயங்கார் தெருவை சேர்ந்த கார்த்தி மகன் பிரசன்னா (எ) வெங்கட்ராமன் (16) இவர் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார் மற்றும் கும்பகோணம் தெற்கு எருத்துக்கார தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் ஹரிஹரன் (15) இவர் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் இன்று பள்ளி வார விடுமுறை என்பதால் நண்பகல் 12 மணியளவில் தனது நண்பர்களுடன் மொத்தம் 9 மாணவர்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஆற்றின் தடுப்பணைக்கு அருகே இருந்த ஆழமான பகுதியில் ஏற்பட்ட சுழலில் இருவரும் சிக்கியுள்ளனர்.
அப்போது நீண்ட நேரம் ஆகியும் இந்த இருவரும் நீரில் காணாமல் போனதால், உடன் குளித்துக் கொண்டிருந்த நண்பர்கள் அவர்களது உறவினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு காணவில்லை என்ற தகவலை தெரிவித்துள்ளனர்.
பின்னர் அப்பகுதி மக்கள் பட்டீஸ்வரம் காவல் நிலையத்துக்கு கொடுத்த தகவலின்பேரில், தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு ஆற்றில் சுழல் ஏற்பட்ட இடத்தில் தேடியதில் ஹரிஹரன் மற்றும் பிரசன்னா சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டீஸ்வரம் காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள் ஆற்றில் குளிக்கும் போது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.