சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக 586 மதுபாட்டில்கள் வைத்திருந்த இருவர்
மாரிமுத்து
UPDATED: May 7, 2023, 1:52:12 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் மற்றும் மதுபான விற்பனை, கடத்தல் போன்றவற்றை அறவே ஒழிக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலும், மாவட்ட அளவில் உதவி ஆய்வாளர் தலைமையிலும் பல்வேறு தனிப்படைகள் அமைத்து தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் எட்டயாபுரம் நாவலக்கம்பட்டி ரோட்டில் உள்ள மயான பகுதி அருகே சந்தேகத்திற்கிடமானமுறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் எட்டயாபுரம் நடுவிற்பட்டியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் இசக்கி மாரிமுத்து (32) கோவில்பட்டியைச் சேர்ந்த காந்தாரி மகன் முருகன் (53) என்பதும், அவர்கள் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே தனிப்படை போலீசார் மேற்படி எதிரிகளான முருகன் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த 586 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேற்படி இருவரையும் கைது செய்து, 586 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாள் டாக்டர். எல. பாலாஜி சரவணன் அவர்கள் பாராட்டினார்.