மணப்பாறை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள சமுத்திரம் கிராமத்தில் உள்ள குடித்தெரு பகுதியில் காட்டு நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்த 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முற்றிலுமாக காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் ஊராட்சி மன்ற நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வில்லை என கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்தும் உடனடியாக காவிரி குடிநீர் வழங்கக்கோரியும் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சமுத்திரத்தில் இருந்து திருச்சி செல்லும் அரசுப்பேருந்தை சிறை பிடித்து காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த வந்த சமுத்திரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தினர் மற்றும் மணப்பாறை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களுக்குள் காவிரி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் தெரிவித்தனர்.
இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டத்தால் திருச்சி செல்ல வேண்டிய அரசு பேருந்து ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்பட்டுச் சென்றது.
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்.