ஜெயலலிதாவின் திருவுருவ சிலையை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் அப்புறப்படுத்தினர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகண்டை கூட்டு சாலை அருகே உள்ள கிராமம் தொழுவந்தாங்கல். இந்த கிராமத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ சிலை வைக்கப்பட்டது. முறையான அனுமதி பெறாமல் சிலையை வைத்துள்ளதாக கூறி காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் சிலையை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு தலைமையில் சங்கராபுரம் - திருக்கோவிலூர் சாலையில் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த, திருக்கோவிலூர் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான சுமார் 30க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் குவிந்தனர். மேலும், சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் அதே பகுதியில் உரிய அனுமதி இன்றி திமுகவின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்கும் போது அதிமுக தொண்டர்கள் எந்தவித எதிர்ப்பும், எந்தவித சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் ஏற்படுத்தவில்லை.
திட்டமிட்டபடி அம்மாவின் சிலையை மட்டும் அப்புறப்படுத்தும் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என விடியற்காலை 5 மணி வரை சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
பின்னர் போலீசார் கலைஞரின் சிலையையும் அங்கிருந்து அப்புறப்படுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர் குமரகுரு, ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், அருணகிரி, தண்டபாணி, துரைராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் 300க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்.