• முகப்பு
  • crime
  • இளம் திருநங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்.

இளம் திருநங்கையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தாய் புகார்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார்குளம் பகுதியில் செம்பா (வயது 24) என்ற இளம் திருநங்கை கடந்த 2 மாதமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் தங்கியிருந்த வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் வேறு வழியாக உள்ளே எட்டி பார்த்தனர். அப்போது செம்பா தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டுள்ளார்.இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அவர்கள் சிவகாஞ்சி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்திருக்கிறார்கள். சிவகாஞ்சி காவல்துறையினர் செம்பாவின் சடலத்தை கைப்பற்றி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தற்கொலையா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற ரீதியில் விசாரணை செய்து வருகிறார்கள். இதுகுறித்து மற்ற திருநங்கைகள் கூறும்போது, கடந்த 7 வருடம் முன்பு திருநங்கையாக மாறிய செம்பா செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வந்து நத்தபேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வேலன் நாடக மன்றத்தின் மூலம் தெருக்கூத்தில் நடித்து வந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன்பு தான் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட தாயார் குளம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். நாடகம் இல்லாத நேரத்தில் கடைகளுக்கு சென்று வசூல் செய்து அந்த வருமானத்தின் மூலம் நன்றாக வாழ்ந்து வந்தார். மிக அழகாக இருக்கும் செம்பாவுக்கு ஏன் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டது என எங்களுக்கு புரியவில்லை என சக திருநங்கைகள் அழுது புலம்பி தீர்த்தனர். செம்பாவின் தாயார் முனியம்மா கூறும்போது, எனக்கு நான்கு மகன்கள் .மிக அழகாக இருந்த மூன்றாவது மகன் முகேஷ் கடந்த ஏழு வருடம் முன்பு திருநங்கையாக மாறினார். சில காலங்களுக்குப் பிறகு எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் முகேஷ் என்ற செம்பாவை அவள் விருப்பப்படியே ஏற்றுக் கொண்டோம். ஊரப்பாக்கத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு வந்து வாடகை வீடு எடுத்து வேலன் நாடக சபா மன்றத்தில் சேர்ந்து நடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார். தினமும் நாங்கள் செம்பவிடம் பேசுவோம். கடந்த இரண்டு நாட்களாக தான் அவளுடன் பேசவில்லை. இந்நிலையில்தான் செம்பா இறந்துவிட்டார் என்ற செய்தி கேள்விப்பட்டோம். என்னுடைய மகனு(ளு)க்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவனு(ளு)டைய சாவில் சந்தேகம் உள்ளது என நான் கருதுகின்றேன். அவன்(ள்) விருப்பப்படியே திருநங்கையாக மாறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தவன்(ள்) ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என சந்தேகத்தை எழுப்பினார். எப்படி இருப்பினும் 24 வயது உடைய அழகிய இளம் திருநங்கை நாடக மன்றத்தில் நடித்துக்கொண்டு, தன்னந்தனியாக வாழ்ந்து, மது போதைக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொண்டார் என கேள்விப்படும்போது மிகுந்த வேதனையாக உள்ளது. இவர் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என பெயர் வெளியிட விரும்பாத திருநங்கை கேட்டுக்கொண்டிருந்தார். செம்பாவின் இறப்பை கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்ததால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பெரும் பரபரப்பு நீடித்தது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்

VIDEOS

RELATED NEWS

Recommended