• முகப்பு
  • crime
  • மதுபோதைக்கு அடிமையான 21 வயதுடைய மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுபோதைக்கு அடிமையான 21 வயதுடைய மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுபத்திரா நகரில் சலூன் கடை நடத்தி வருபவர் ராமு வ/49. இவர் பாரதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தன் குடும்பத்துடன் தங்கி வந்துள்ளார். இவருக்கு ரேணுகா என்ற மனைவியும், தினேஷ் (வயது 21) என்ற மகன், பத்தாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். தினேஷ் வ/21 வேலைக்கு செல்லாமல் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையாகி அடிக்கடி ராமுவிடம் தகராறு செய்வது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்வெட்டு அடிக்கடி ஏற்பட்டதால் ராமு மற்றும் அவருடைய மனைவி ரேணுகா இருவரும் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். நள்ளிரவு 2 .00 மணிஅளவில் மாடிக்கு வந்த தினேஷ் மது போதையில் தன்னுடைய அம்மா ரேணுகாவிடம் வீண் சண்டை போட்டுள்ளார். உடனே தினேஷின் அம்மா ரேணுகா பால்கனிக்கு சென்று படுத்துவிட்டார். மின்சாரம் வந்துவிட்டது என கூறிய தந்தையிடம் தினேஷ் சண்டை போட்டுள்ளார். மேலும் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்து நெஞ்சு ஆகிய பகுதிகளில் சரமாரி தாக்கி துடிக்கத் துடிக்க தந்தையை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்று விட்டான்.சத்தம் கேட்டு அலறி அடித்துக் கொண்டு மாடிக்கு ஏறி வந்து பார்த்த ரேணுகா கூச்சலிட்டு கதறி அழுதுள்ளார். ரேணுகாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த 108 ஊழியர்கள் ராமு இறந்து விட்டார் என்று கூறியதால் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் ராமுவின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தந்தையை கொலை செய்த தினேஷ்சை தேடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை எடுத்து வந்த தினேஷ் தந்தை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தகப்பனை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் ராமுவின் மகள் நாளை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

RELATED NEWS

Recommended