மது அருந்தி இருவர் உயிரிழந்ததற்கு சயனைடு காரணம் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஆர்.ஜெயச்சந்திரன்
UPDATED: May 22, 2023, 5:40:54 AM
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது தஞ்சாவூரில் மது அருந்தி குப்புசாமி, விவேக் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.
மேலும் இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதையடுத்து இருவரது உடல்களிலும் இருந்த வயிற்றுப் பகுதி, கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை எடுக்கப்பட்டு, தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டன.
இந்த ஆய்வறிக்கையில் மெத்தனால் ஆல்கஹால் இல்லை என்பதும், சயனைடு விஷம் இருந்ததும் தெரிய வந்தது.
உயிரிழந்த விவேக்குக்கு குடும்ப பிரச்னை காரணமாக அவர் மனைவியை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
இந்த விசாரணையின் முடிவில் முழு விவரமும் தெரியவரும். இந்தச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
அப்போது மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உடனிருந்தார்.