மணப்பாறையில் குடிபோதையில் தனியார் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஒரு வழி சாலையில் தனியார் பேருந்து அதிவேகமாக செல்வதை அறிந்த போக்குவரத்து போலீசார் உடனே அந்த பேருந்தை நிறுத்தினார்.
சற்று தூரம் தள்ளி பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வெள்ளைச்சாமி பஸ்சை நிறுத்திய போக்குவரத்து காவலர் சரவணன் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஓட்டுனர் குடிபோதையில் இருப்பது போக்குவரத்து போலீசாருக்கு தெரியவந்தது.
இதனால் சந்தேகமடைந்த போக்குவரத்து போலீசார் பேருந்தை மாற்று ஓட்டுனர் மூலம் போக்குவரத்து குறைவான காமராஜர் சிலை அருகே எடுத்துச் சென்றனர். பின்னர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் நிஜாமுதீன், வெள்ளைச்சாமியை பரிசோதனை கருவி மூலம் சோதனையிட்டபோது அவர் குடிபோதையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து போக்குவரத்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் அவருக்கு அபராதம் விதித்தனர். பின்னர் மாற்று பேருந்து ஓட்டுனர் தனியார் பேருந்தை எடுத்துச் சென்றார். குடிபோதையில் தனியார் பேருந்தை ஓட்டுநர் இயக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது
மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்