காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் 40 ஆண்டு கால ராட்சச மரம் அடியுடன் முறிந்து விழுந்தது.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட காவலன் கேட் பகுதியில் மாவட்ட ஆட்சியர் வளாகம் அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் ,பொதுப்பணித்துறை அலுவலகம், கனிம வளத்துறை அலுவலகம், சிறுசேமிப்பு அலுவலகம், இ சேவை மையம், வேலைவாய்ப்பு தொழில் மையம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ,மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் இயங்குகின்றது.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வளாகத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே இருந்த 40 ஆண்டுகால பழமையான, பல கிளைகளை கொண்ட ,சுமார் 40 அடி உயரம் உள்ள புங்க மரம் ஒன்று அடியுடன் முறிந்து கீழே விழுந்தது. மள மளவென என மரம் முறியும் சத்தத்தைக் கேட்டு அப்பகுதியில் அமர்ந்திருந்த ஒரு சிலர் அங்கிருந்து அகன்று சென்றதால் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுவே அலுவலக நேரத்தில் மரம் முறிந்து கீழே விழுந்து இருந்தால் ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்து இருப்பார்கள். நல்வாய்ப்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும்போது இந்த மரம் விழுந்ததால் யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லை.
திங்கள் கிழமை தோறும் இந்த வளாகத்தில் உள்ள மரங்களின் கீழே ஏராளமான மக்கள் அமர்ந்து மனு எழுதி தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் அளிப்பார்கள். மேலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் பல அலுவலகங்களுக்கு வருகின்ற முக்கியஸ்தர்கள் இங்குள்ள மரங்களின் நிழலில் நின்று பேசுவதும் இளப்பாறுவதும் உண்டு.
சுமார் 4000 கிலோ எடையுள்ள இந்த மரம் அலுவலக நேரத்தில் விழுந்திருந்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அங்கு உள்ளவர்கள் அச்சத்துடன் கூறினார்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.