புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டு பெருவிழா
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூர் கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கீழைநாட்டு பதுவா புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து பங்குதந்தை ஆரோக்கியதாஸ் ஏற்பாட்டின் பேரில் மறைமாவட்ட அருட்தந்தையர்களால் நவநாள் திருப்பலி, சிறப்பு பிரார்த்தனை மற்றும் குணமளிக்கும் வழிபாடு தினந்தோறும் நடைபெற்று வந்தது.மேலும் மாலை நேரத்தில் முக்கிய தெருக்கள் வழியாக புனித அந்தோணியார் சொரூபம் பவனியாக வந்தது.
நேற்று முன்தினம் பொருத்தனை தேர்பவனி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ஆடம்பர தேர்பவனி நள்ளிரவு வாணவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க நடைபெற்றது.வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேரில் புனித அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
அதற்கு முன்பாக புனித சூசையப்பர் மற்றும் மாதா சொரூபம் வைக்கப்பட்ட தேர்கள் பவனியாக சென்றது. அப்போது புனித அந்தோணியாரின் மகிமைகள் குறித்த பாடல்கள் ஒலிக்கப்பட்டன.
ஆடம்பர தேர்பவனி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக சென்றது.இதில் சின்னசேலம் பகுதி மட்டுமின்றி கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி . சுரேஷ்