தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சியர்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பின்படி, 2022-ஆம் ஆண்டு சூலை-28 ஆம் நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு தொகைகள் வழங்கப்பெற தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் 28-07-2022–வியாழக்கிழமை அன்று பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5,000/-, இரண்டாம் பரிசு ரூ.3,000/-, மற்றும் மூன்றாம் பரிசு ரூ. 2,000/- இவை அல்லாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் ரூ.2000/– சிறப்பு பரிசு என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது.
இப்போட்டியானது காலை 09.30 மணிக்கு தொடங்கப்படும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளியில் பயிலும் மாணவ/மாணவிகள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.