வாகன புதுப்பிப்பு சான்று வாங்கிய கல்லூரிப் பேருந்து தீயில் எரிந்து கருகியது ஆர்டிஓ அலுவலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஆய்வுகள் மேற்கொள்வதில்லை ?
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடகால் ஊராட்சியில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ் ஆப் டெக்னாலஜி என்ற கல்லூரி இயங்கி வருகின்றது.
இன்று மாலை கல்லூரி முடிந்து 35 மாணவர்களை ஏற்றி கொண்டு கல்லூரியின் பேருந்து தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் எண்ணூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
பரணிபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது கல்லூரி பஸ்சின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. இதனையடுத்து கல்லூரி பேருந்தின் ஓட்டுனர் எபினேஷ் என்பவர் பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டு இறங்கி சென்று பார்த்த போது பஸ் திடீரென கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறினார்.
இதையடுத்து பஸ்சுக்குள் இருந்த மாணவர்கள் பதறியடித்தபடி பஸ்சில் இருந்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்த நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் மதுரவாயல் தீயணைப்பு அதிகாரி செல்வன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பஸ்சில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர்.
உரிய நேரத்தில் டிரைவர் பஸ்சை ஓரமாக நிறுத்தி பார்த்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் 35 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தீ விபத்துக்குள்ளான இந்த கல்லூரி பேருந்து கடந்த 5 தினங்களுக்கு முன்புதான் ஸ்ரீபெரும்புதூர் ஆர்டிஓ அலுவலகத்தில் வாகன புதுப்பிப்பு சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்டிஓ அலுவலர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு முறையான ஆய்வுகள் மேற்கொள்வதில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.