Author: THE GREAT INDIA NEWS

Category:

காஞ்சிபுரம் : சுற்றுலா மற்றும் கோவில்களுக்கு பெயர் பெற்ற காஞ்சிபுரம் மாநகர் சமீபகாலமாக ரௌடிகளின் பிடியில் சிக்கி சிதறுண்டு கிடைக்கின்றது. காவல்துறையினர் பெரும்பாடுபட்டு ரவுடிகளை பிடித்து குண்டர் தடைச் சட்டம், மற்றும் 110 சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுத்து ரவுடிகளின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அப்படி இருந்தபோதும் அவ்வப்போது ரவுடிகளின் அட்டகாசம் கட்டுக்கடங்கியதாக தெரியவில்லை. காவல் துறையிலும் பல காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால் ரவுடிகளுக்கு ஈடாக காவலர்களால் பணியாற்ற முடிவதில்லை . இந்நிலையில் மிகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உற்சவத்தின் 6 ம் நாளான வெள்ளித் தேர் வீதி உலா வருவதை காண நேற்று இரவு முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஓரிக்கை பகுதியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவன் ராகுல், திருப்பக்கூடல் தெருவை சேர்ந்த பிரபல ரவுடி தினேஷின் வீட்டருகே வசிப்பவரான நரேஷ் (வயது 22), நரசிங்கராயர் தெருவை சேர்ந்த கோவாவில் பணிபுரியும் இன்ஜினியர் கவியரசு (வயது 23) என 10க்கும் மேற்பட்ட நண்பர்கள் வெள்ளித் தேர் உற்சவத்தை பார்த்துவிட்டு மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தபடியால் காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக செல்ல முற்பட்டனர். அப்போது அடையாளம் தெரியாத ஒரு போதை ஆசாமியின் காலை மிதித்து விட்ட காரணத்தினால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ‌மேலும் அந்த தெரு வழியே செல்ல முற்படும் போது அந்த அடையாளம் தெரியாத அந்த நபர் 2000 ரூபாய் பணம் கொடு இல்லையென்றால் திரும்பி போ என போதையில் மிரட்டியதாக தெரியவருகின்றது. அதனால் அச்சப்பட்ட நண்பர்கள் நரசிங்கராயர் தெரு வழியாக தங்கள் வீட்டுக்கு செல்லலாம் என எண்ணி கச்சபேஸ்வரர் கோவில் அருகே வந்தபோது திடீரென 15க்கும் மேற்பட்ட கும்பல் கத்தியோடு வந்து நரேஷ், கவியரசு , ராகுல் ஆகிய மூவரையும் சரமாரியாக வெட்டியது. இவர்களின் அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டதை கண்டு அந்த ரவுடி கும்பல் தலைதெறிக்க ஓடி தப்பியது. சம்பவத்தை கேள்விப்பட்ட சிவகாஞ்சி காவல்துறையினர் விரைந்து வந்து படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு போதிய மருத்துவர்கள் இல்லாததால் முதல் உதவி சிகிச்சை மட்டும் அளிக்கப்பட்டு நரேஷ், கவியரசு ஆகிய இருவரும் சென்னை ராமசந்திரா மருத்துவமனைக்கும், ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பப்பட்டனர். காஞ்சிபுரம் நகரையே கலங்கடித்துக் கொண்டு உள்ள பிரபல ரவுடி தினேஷின் வீட்டருகே வசிக்கும் நரேஷ் தினேஷின் உறவினர் என 'கூறப்படுகிறது". அந்தக் கோணத்திலும் சிவகாஞ்சி காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள். கவியரசு "நேஷனல் செஸ் சாம்பியன்" என்பதும் கோவா மாநிலத்தில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார் என்பதும் கோவில் உற்சவத்தைக் காண விடுமுறையில் வந்துள்ளார் என்பதும் தெரியவருகிறது. மாவட்ட தனிப்படையினர், டிஎஸ்பி தலைமையிலான தனிப்படையினர் என ஏராளமான காவல்துறையினர் தப்பி ஓடிய ரவுடிகளை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதிக மக்கள் கூடியிருந்த நிலையில் 15க்கும் மேற்பட்டவர்கள் பட்டா கத்தியுடன் நரேஷ், கவியரசு , ராகுல் ஆகியவர்களை வெட்டிய படு பயங்கரமான செயல் காஞ்சிபுரம் நகரையே குலுக்கி, "மக்களை நிம்மதி இழக்க" செய்துள்ளது. ரவுடிகளின் கொட்டத்தை அடக்கி விட்டதாக காவல்துறையினர் உண்மைக்கு மாறான தகவலை அளிக்கின்றன என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

Tags:

Comments & Conversations - 0