ரேஷன் அரிசி கடத்திய கார் பறிமுதல் தப்பியோடிய கார் ஓட்டுநருக்கு வலை!
வாசுதேவன்
UPDATED: May 9, 2023, 8:15:43 PM
வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனின் உத்தரவுபடியும், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தியதின் பேரில் நேற்று விடியற்காலை வேலூர் பறக்கும் படை தனி வட்டாட்சியர் விநாயகமூர்த்தி மற்றும் திவாகர் உள்ளிட்ட அவரது குழுவினர் இரவு ரோந்து பணியில் சேர்க்காடு பொன்னை ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த மாருதி 800 காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த வாகனத்தில் 600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. காரை ஓட்டி வந்த நபர் தப்பி ஓடி விட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி திருவலம் அரசு சேமிப்பு கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
வாகனத்தின் ஓட்டுநரை கண்டறிந்து அவர் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேலூர் உணவுப் பொருள் பாதுகாப்பு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ரேஷன் அரிசி கடத்த பயன்படுத்திய அந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. காரை விட்டு விட்டு தப்பியோடிய ஓட்டுவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.