ஆசிரியர்களிடம் அடாவடி செய்யும் மாணவர்கள் நிரந்தர நீக்கம் !!!
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால் சான்றிதழ்களில் என்ன காரணத்திற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டு, பள்ளியிலிருந்து நிரந்தரமாக நீக்கப் படுவார்கள்' என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடப்பதாக கடந்த சில நாட்களாக வீடியோக்கள் வெளிவருகின்றன. கண்ணியம் குறைவாக நடக்கும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும் என பலரும் குரல் கொடுத்து வந்தனர். அது தொடர்பாக சட்ட சபையில் பா.ம.க எம்எல்ஏ ஜி. கே. மணி கேள்வி எழுப்பினார்.
இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலளித்ததாவது வரும் கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்தி விட்டே, பின் பாடங்கள் நடத்தப் படும். இன்றைய கால கட்டத்தில் கவனச்சிதறல்கள் அதிகரித்துள்ளது.
மன அழுத்தத்தில் இருந்த குழந்தைகளை கட்டுப் படுத்தும் விதத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எதற்கெடுத்தாலும் ஆசிரியர்களை குறை கூறுவது தவறு. பள்ளிகள் பெற்றோர்கள் - அரசு ஆகியோருக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளது.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டி.சி.யிலும், நன்னடத்தை சான்றிதழிலும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப் படுவார்கள். மாணவர்கள் பள்ளிக்கு கைப்பேசி கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
செய்தியாளர் பா. கணேசன்.