• முகப்பு
  • அரசியல்
  • எங்கள் பதவி காலாவதியாகவில்லை பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது - கனிமொழி.

எங்கள் பதவி காலாவதியாகவில்லை பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது - கனிமொழி.

மாரிமுத்து

UPDATED: May 8, 2023, 3:07:29 PM

தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் டூவிபுரம் 5ம் தெருவில் நடைபெற்றது.

வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார்.

மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திமுக துணைச்செயலாளர் கனிமொழி எம்.பி பேசுகையில் திருக்குறளை ராஜ்பவன் நன்றாக படித்து தெரிந்து கொண்டு பேச வேண்டும். கலைஞர் படித்து பொறுப்போடு செங்கோலாக நிமிர்ந்து நின்று பணியாற்றினார்.

பிஜேபியினர் பேசாத கருத்தையெல்லாம் ஆளுநர் பேசுகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15லட்சம் செலுத்தப்படும் என்று சொன்னர் மோடி, ஆனால் திமுக தேர்தல் அறிக்கையில் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று கூறியதை ஏன் வழங்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறார்கள் உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும்.

கலைஞர் ஆட்சிகாலத்தில் பெண்களுக்கு திருமண உதவித்தொகை 8ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு என்று மாற்றம் செய்து வழங்கி கல்வியை ஊக்குவித்தார். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையை தாண்டி இன்று தமிழகத்தில் பெண்கள் படிப்பில் முன்னேறிவிட்டனர்.

12வரையாவது படிக்க வேண்டும் என்று கலைஞர் நினைத்த என்னத்தை தளபதி கல்லூரி படிப்புக்கு ரூ ஆயிரம் வழங்கியதின் மூலம் அதை நிறைவேற்றியுள்ளார்.

கடந்த ஆண்டு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் நிறுத்திய பலரும் மீண்டும் கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளனர். பெற்றோர்கள் ஆண்கள் படித்தால் உழைத்து தருவான் என்ற எண்ணத்தில் இருந்த காலம் மாறி இப்போது பெண்களும் படிப்பில் முன்னேறிவிட்டனர்.

பெண்களுக்கான இலவச பஸ் பயணம் மூலம் அவர்களுக்கு ஒருவகையில் விடுதலை கிடைத்துள்ளது. யாரையும் எதிர்பார்க்காமல் உறவினர் மற்றும் தாய் தந்தையினரை அருகிலிருந்தால் பார்க்க செல்வதற்கு வசதியாக உள்ளது. அதன் மூலம் ரூ ஆயிரம் வரை பலருக்கு மிச்சமாகிறது. அதை சிலர் சேமிப்பாகவும் பலர் சாப்பாடு தேவைக்கும் பூர்த்தி செய்து வருகின்றனர்.

திராவிடமாடல் ஆட்சி தொடக்கத்திற்கு முன்பு நீதி கட்சி மூலம் சென்னையில் மட்டும் மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காமராஜர் ஆட்சி காலத்தில் மதிய உணவாக மாறி எம்.ஜி.ஆர் ஆட்சியில் சத்துணவாக மாறி கலைஞர் ஆட்சியில் முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது.

தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டமான காலை உணவு திட்டத்தில் 18 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

அதே போல் படித்த இளைஞர் மற்றும் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு திறன் பயிற்சியின் மூலம் தங்களது தகுதியை வளர்த்து கொண்டவர்கள் 12 லட்சம் பேர் இப்படி தினம் தோறும் மக்களுக்கான திட்டங்களை எப்படி எல்லாம் செயல்படுத்தலாம் என்று சிந்தித்து செயல்படும் தளபதி ஆட்சியை பார்த்து திராவிடம் காலாவதியாகி விட்டது என்று சனாதனம் பற்றி ஆளுநர் பேசுகிறார்.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும். என்ற அடிப்படையில் பெரியார், அண்ணா, கலைஞர், வழியில் தளபதி தமிழகத்தில் உள்ள 2200 கோவில் சொத்துக்களை மீட்டு பாதுகாத்துள்ளார். இதை சனாதனம் செய்யவில்லை. திராவிடம் தான் செய்தது.

யாருக்கெல்லாம் என்ன தேவை என்று சிந்திப்பது திராவிடம் டெல்லியில் ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய பின்னர் வாபஸ் வாங்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் விவசாயிகளை பாதுகாப்பதற்கு என்று தனி பட்ஜெட், தளபதி ஆட்சியில் போடப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட இந்த ஆண்டு பட்ஜெட்டில் வாழை, பனைமரம், ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் படித்தவர்கள் தான் பலர் வெளிநாட்டில் பணியாற்றுகிறார்கள். இந்தியாவை ஆளும் நிலைக்கு திராவிட மாடல் வந்து விட்டது.

மக்களை தேடி மருத்துவம் வீட்டிற்கே சென்று ரத்த கொதிப்பு, உள்ளிட்டவைகளை பரிசோதனை செய்து மாத்திரை மருந்து வழங்கும் புதுமையான திட்டத்தின் மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர்.

108 ஆம்புலன்ஸ் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தளபதி ஆட்சியில் எந்த பகுதியில் விபத்துக்கள் நடந்து யார் பாதிக்கப்பட்டாலும் அருகில் உள்ள மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு அதற்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

மீனவர்களின் மீன்பிடித் தடைகாலத்தில் வழங்கப்பட்ட 5 ஆயிரத்தை 6 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. பருவநிலை மாற்றத்தை பாதுகாக்க 2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ராவ்பகதூர் குரூஸ்பர்னாந்து மணி மண்டபம் 77லட்சத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. 

தூத்துக்குடி துறைமுகம் மேம்படுத்துதல் தூர் வாருதல் பணிகள் நடைபெறுகின்றன.

கோரம்பள்ளம் குளம் 12 கோடியில் தூர் வாருதல் உப்பளத் தொழிலாளர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஆட்சிக்கு வந்ததும் மழைகாலங்களில் 5 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்தது மட்டுமின்றி அதற்கு தனிநலவாரியமும் அமைக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் 8400 பேர் பயனடைவார்கள் அவர்களது குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை கடன் பெறுதல் உள்ளிட்டவைகள் மூலம் பயன் பெறுவார்கள் அவர்கள் கண்ட கனவையும் தளபதி நிறைவேற்றியுள்ளார்.

எங்களுக்கு எதிராக வந்துவிடுவார்களோ என்ற எண்ணத்தில் சிலர் தூது விடுகிறார்கள். திராவிடம் எல்லோருக்கும் ஒன்று தான் சமூகநீதி சமதர்மம் பாதுகாப்பது ஒரு தோட்டத்தில் உள்ள எல்லா பழமும் எங்களுக்கு தான். என்று சொல்வது சனாதனம். இது எல்லோருக்கும் என்று சொல்வது திராவிடம்.

சனாதனம் மதகுருக்களை மதிக்க வேண்டும். யாரையும் தூக்கி பிடிக்க வேண்டாம். நீயும் நானும் ஒன்று என்று நினைக்க வேண்டும். எல்லா தப்பையும் நீங்கள் செய்துவிட்டு எங்களை காலாவதியாகி விட்டது என்று கூறுகிறீர்கள். மக்கள் உங்களை விரட்டும் காலம் வந்து கொண்டு இருக்கிறது.

அம்பேத்கார் சட்டத்தை இயற்றும் போது என்னையும் அமைச்சரையும் மக்கள் ஒட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததை போல் ஆளுநரையும் அப்படி தேர்வு செய்யலாமா என்று கேட்;டபோது அந்த பதவிக்கு யாரும் வரமாட்டார்கள். இது ஒரு அலங்கார பதவிதான் என்று கூறினார்கள் அந்த அலங்காரம் தேவையில்லை என்றால் அதை எடுத்துவிடலாம்.

எங்கள் பதவி காலாவதியாகவில்லை பிரிட்டிஷ் காலத்தில் கொண்டுவந்த உங்கள் பதவிதான் காலாவதியாக போகிறது. தளபதியின் ஆட்சியில் சாதனைகள் தொடரும். நாட்டின் மாற்றம் தமிழ்நாட்டில் இருந்து துவங்கும். அனைவருக்கும் நன்றி இவ்வாறு கனிமொழி எம்.பி பேசினார்.  

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் தமிழகத்தில் 1222 இடங்களில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கலைஞர் ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் நீட் தேர்வு நுழையவில்லை.

தான் பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக எடப்பாடி ஆட்சியில் வந்தது. மாநில உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுத்தார் எடப்பாடி மோடிக்கு ஜால்ரா போடுபவர்கள் நமக்கு தேவையில்லை.

36 நலவாரியங்கள் மூலம் 6லட்சத்து 75ஆயிரம் பேர் பயனடைகின்றனர். இந்த தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்றுள்ளன, அதில் மீண்டும் தொடர கனிமொழி எம்.பி தேவை என்று பேசினார்.

மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசைப்பற்றி பேசியபோதே அவருக்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அந்த கருத்தை பின்வாங்கினார். 10 ஆண்டு ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறவில்லை. மாநகராட்சியிலும் அப்படிதான் இருந்தது. ஆமை வேகத்தில் நடைபெற்ற ஸ்மார்ட் சிட்டி பணிகளை நாங்கள் வந்த பிறகு வேகப்படுத்தி பல பணிகளை முடித்துள்ளோம்.

சிப்காட் பகுதியில் உள்ள மேம்பாலம் ஒரு பகுதியில் மட்டும் இயங்கி வந்தது. அதன் மூலம் 26 பேர் விபத்தில் இறந்தனர். இதற்கு தீர்வு கிடைக்கும் வகையில் கனிமொழி எம்.பி அந்த பணியையும் முடித்து கொடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் மூன்றரை லட்சம் வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர் வரும் தேர்தலில் போட்டியிட்டு 5 லடம்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் அதற்கு நாம் அனைவரும் உழைக்க வேண்டும். பிஜேபியின் சலசலப்புக்கு எல்லாம் அஞ்ச கூடாது என்று பேசினார்.

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணைச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன்,  உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநில பேச்சாளர் இருதயராஜ் நன்றியுரையாற்றினார்.

VIDEOS

RELATED NEWS

Recommended