புதிய தமிழகம் கட்சி சார்பில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி
நெல்சன் கென்னடி
UPDATED: May 10, 2023, 7:27:29 AM
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தியும், சட்ட விரோத பார்களை அறவே ஒழித்திட வலியுறுத்தியும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் க.கிருஷ்ணசாமி தலைமையில் 500 க்கும் மேற்பட்டோர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கி மாபெரும் பேரணி நடத்தினர்.
புதிய தமிழகம் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், 4000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் இரவு பகல் பாராமல் மதுவிற்பனை நடைபெற்று வருவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக திமுக கொடுத்த மதுவிலக்கு வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மனு அளிக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணியில் பங்கேற்பதற்கு திமுக-வை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டது.
அதனை ஏற்று அமமுக சார்பில் அதன் துணை பொதுச் செயலாளர் செந்தமிழன் மற்றும் கொள்கை பரப்பு செயலாளர் சி ஆர் சரஸ்வதி இந்த பேரணிக்கு ஆதரவு தெரிவித்து கட்சியினர் நேரில் வந்து கலந்து கொண்டனர்.
மேலும், இந்திய ஜனநாயக கட்சியின் மாநில மகளிர் அணி துணை செயலாளர் கவிதா, இளவரசி, மாநில மாணவர் அணி ஒருங்கிணைப்பாளர் டி பி பார்த்திபன், தலைமை நிலைய செயளாலர் ஏ கே டி வரதராஜன் உள்ளிட்டோர் கட்சியினருடன் கலந்து கொண்டனர்.
பேரணியை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி,
திமுகவினர் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை கொண்டு வர ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று கருதுகிறேன்.
ஏனென்றால் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மு க ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து மதுவிலக்கை வலியுறுத்தி வந்தனர்.
ஆட்சிக்கு வந்த பின் அதனை பரவலாக்குவதை தவிர மது விலக்குக்கு ஆதரவாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த போராட்டம் தொடக்கம் தான் முடிவல்ல அடுத்த போராட்டம் எப்படி இருக்கும் என்று எச்சரிக்கும் வகையில் தான் இந்த போராட்டம் இன்று 10.5.2023 இந்த பேரணி முடிவில் ஆளுநரை சந்தித்து 250 பக்கம் கொண்ட மனு அளிக்க உள்ளோம் என்றார்.