காஞ்சிபுரத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி பேதி மூதாட்டி ஒருவர் பலி. சுகாதாரத்துறை கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் அடுத்த குருவிமலை ஊராட்சியில் கடந்த 10 நாட்களாக எம்ஜிஆர் நகர், கலைஞர் நகர், அம்மன் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு போன்ற பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட மக்களுக்கு வாந்தி பேதி ஏற்பட்டுள்ளது.
அதில் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி அம்மாள் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 8 தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு லஷ்மி அம்மாள் உயிரிழந்தார்.
மேலும் லஷ்மி அம்மாளின் 45 வயது உடைய மகன் குமார் என்பவருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அதேபோல் முருகன் கோவில் பகுதியில் பூ வியாபாரம் செய்யும் மலர் , துப்புரவு தொழிலாளியான மற்றொரு மலர், சீனிவாசன் உள்ளிட்ட பலருக்கும் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .
அதனைத் தொடர்ந்து பாலாற்றில் புதிதாக அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணற்றில் இருந்து வருகின்ற தண்ணீரை ஊராட்சி மன்ற செயலாளர் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
10 நாட்களுக்கு மேலாக 15க்கும் மேற்பட்ட மக்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டும் இதுவரையில் சுகாதாரத்துறை கண்டு கொள்ளவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.