44வது உலக ஒலிம்பியாட் செஸ் போட்டி முன்னிட்டு மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அமைச்சர் சா.சி. சிவசங்கர் செஸ் போட்டியை துவக்கி வைத்தார்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கூடலூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 44-வது ஒலிம்பியாட் செஸ் போட்டி-2022 குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போக்குரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் செஸ் போட்டியை மாவட்ட ஆட்சித்தலைவர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., அவர்கள், முன்னிலையில் (13.07.2022) அன்று துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
44-வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜுலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதுவரை இந்தியாவில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் இந்த ஒலிம்பியாட் போட்டியில் உலகின் முதல் நிலை கிராண்ட்மாஸ்டர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
188 நாடுகளை சேர்ந்த பல்வேறு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இப்படிப்பட்ட பெருமை மிகு ஒலிம்பியாட் போட்டி மீண்டும் இந்தியாவில் நடைபெற பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அப்படியே நடந்தாலும் மீண்டும் ஒரு முறை தமிழ்நாட்டில் நடைபெற வாய்ப்புகள் குறைவு.
பெரம்பலூர் மாவட்ட சாம்பியன் என்ற பெருமையுடன் தமிழ்நாடு அரசின் விருந்தினராக மாமல்லபுரத்தில் மூன்று நாட்கள் தங்கி ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் சர்வதேச தரத்திலான இந்த போட்டியை நேரில் காணவும், கிராண்ட்மாஸ்டர்கள் உடன் விளையாடி அவர்களிடம் உரையாடி செஸ் பயிற்சி பெறவும் ஓர் அரிய வாய்ப்பு ஆகும்.
44வது ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு பெரம்பலூர் மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக போட்டி நடைபெறும். இப்போட்டியில் முதல் இடம் பெறும் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் ஒலிம்பியாட் போட்டியை காண தேர்ந்தெடுக்கப்படுவர்.
முதல் 25 இடங்களைபெறும் ஆண்கள் மற்றும் 25 பெண்களுக்கு ஒலிம்பியாட், தமிழ்நாடு அரசு AICF சின்னங்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்படும்.
புதிதாக AICF பதிவு செய்பவர்கள் https://prs.aicf.in/new-register என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும். ஏற்கனவே AICF பதிவு செய்தவர்கள் https://prs.aicf.in/players என்ற இணையதளத்தில் புதுப்பித்துக்கொள்ளவேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.