நகைக் கடை உரிமையாளரை கீழே தள்ளி சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்க பிஸ்கட்கள் வழிப்பறி
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாம் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் விமல்சந்த் (வயது 60) .இவர் கருக்குப்பேட்டை மெயின் ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக அடகு கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை டிராவல் பேக்கில் வைத்து பாதுகாப்பாக தனது இருசக்கர வாகனத்தில் முன்புறம் வைத்துக்கொண்டு காஞ்சிபுரம் புறப்பட்டார்.
அய்யம்பேட்டை அரசு கால்நடை மருத்துவமனை அருகே வந்த போது திடிரென தொலைபேசி அழைப்பு வந்ததால் சாலையோரம் வாகனத்தை நிறுத்தி வாகனத்தில் அமர்ந்தபடியே செல்போனில் பேசி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டு உயர்ரக பைக்கில் வந்து, வாகனத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த விமல் சந்தை எட்டி உதைத்து நிலை தடுமாற செய்தனர்.
பைக்கில் இருந்து ஒரு நபர் இறங்கிவந்து விமல் சந்த் பைக்கில் வைத்திருந்த நகை பையை பறித்துக்கொண்டு பைக்கில் மின்னல் வேகத்தில் பறந்தனர். காஞ்சிபுரம் மார்கமாக தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து வாலாஜாபாத் காவல்துறை ஆய்வாளர் ஜெயவேலுவிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க உத்தரவிட்டார்.
நகை உரிமையாளர் கொண்டு சென்ற பையில் சுமார் 250 கிராம் தங்க பிஸ்கட்டுகள் , வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் 2.5 லட்ச ரூபாய் என கூறப்படுகிறது.
நாளை அவரது குடும்ப நிகழ்ச்சி நடைபெறுவதை யொட்டி கடை விடுமுறை என்பதால் நகைகளை எடுத்து சென்றதாகவும் , இவரது கடையிலிருந்து கிளம்பும்போது மர்ம நபர்கள் பின்தொடர்ந்து சென்றது சிசிடிவி காட்சியில் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தின் அருகே உள்ள சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினர் பார்த்து வழிப்பறி நபர்களை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சுற்றுப் பகுதி முழுவதும் காவல்துறையினரை உஷார் படுத்தப்பட்டு வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் நடைபெற்ற அய்யம்பேட்டை பகுதியில் எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும் அப்படிப்பட்ட சூழலில் விமல் சந்தை கீழே தள்ளிவிட்டு சுமார் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகைகளை வழிப்பறி செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.