தமிழகத்தில் கள்ளுக்கான தடையை நீக்கி இருந்தால், கள்ளச்சாராய உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை -
முத்தையா
UPDATED: May 17, 2023, 7:32:40 PM
தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளரும் , தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாநில செயலாளருமான செ. நல்லசாமி, நாமக்கல்லில் இன்று மதியம் சனி இன்டர் நேஷனல் ஹோட்டலில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை, பூரண மதுவிலக்கு அமல்படுத்தும் மாநிலமாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான், இந்தியாவில் தலைசிறந்த மாநிலமாக தமிழகம் முன்னேற்றப் பாதையில் செல்லும். தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக மாற்ற, பூரண மதுவிலக்கு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மேலும், பீஹார் மாநிலத்தில், கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கூறிய போது, கள்ள சாராயம் குடித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு நிவாரண நிதி கொடுத்தால் அது தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தும், தவறு செய்தது சரியானது என, அரசே ஒத்துக் கொள்ளும் நிலை ஏற்படும்.
அது தவறானது. அதனால், கள்ளச்சாராயம் குடித்து இறந்து போன நபர்களுக்கு, நிவாரண நிதி வழங்க முடியாது என, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக மறுத்து விட்டார்.
ஆனால், தமிழகத்தில், முதல்வர் மு. க. ஸ்டாலின், கள்ளச்சாராயம் குடித்துவிட்டு இறந்து போனவர்களுக்கு, உடனடியாக, தலா ரூ. 10 லட்சம் நிவாரண நிதி அளித்துள்ளதின் மர்மம் என்னவென்று தெரியவில்லை.
தற்போது, ஒரு பாட்டில் ரூ. 12 உற்பத்தி செய்யப்படும் பிராந்தி உள்ளிட்ட மதுவகைகளை, ரூ. 300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்வதால், சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள், கள்ளச்சாராயத்தை நாடுகிறார்கள்.
கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கி இருந்தால், ரூ. 30 செலவில் மது பிரியர்கள் கள் குடித்திருப்பார்கள். உடல்நிலை பாதிக்காது. உயிருக்கு ஆபத்து கிடையாது. உலக அளவில் இயற்கையாக உற்பத்தியாகும் கள்ளுக்கு, தமிழகத்தை தவிர எங்கும் தடை கிடையாது.
உலகளாகவிய நடைமுறையை ஏற்று, அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து, தமிழகத்தில், கள்ளுக்கான தடையை நீக்கியிருந்தால், கள்ளு கடை திறப்பதால் இதுபோன்ற கள்ளச்சாராய உயிர் இழப்புகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை
இவ்வாறு செ. நல்லசாமி கூறினார்.