என் கட்சியை பற்றி அவதூறாக பேசினால் அடிப்பேன்.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
சென்னையில் பாஜக., மாநிலத் தலைவர் திரு. அண்ணாமலை, 27.05.2022 அன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, 'விதிகளை மீறி பேனர் வைக்கப்பட்டது' குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு, 'உங்களுக்கு 200 ரூபாய்!' என அவரை இழிவுபடுத்தி பதிலளித்துள்ளார் அண்ணாமலை. இதற்கு பத்திரிகையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன், "சரி 500 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.. 1,000 ரூபாய் வாங்கிக் கொள்ளுங்கள்.. 2,000 ரூபாய் உங்களுக்கு கிடைத்துவிடும்" என்றெல்லாம் அடுத்தடுத்து பத்திரிகையாளர்களை ஏளனமாக இழிவுபடுத்திப் பேசியுள்ளார்.
"பத்திரிகையாளர்கள் தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு லஞ்சமாகப் பணம் வாங்குகிறார்கள்" என்பது போன்ற தோற்றத்தை உண்டாக்குவதோடு, அவர்களை அநாகரிகமாகப் பேசுவது கண்டனத்துக்குரிய செயல் ஆகும். கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்துவது, அநாகரிகமாக நடந்து கொள்வது, மிரட்டுவது போன்ற நடவடிக்கைகளை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். ஒரு முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரி லஞ்சம் தருகிறேன் என்று கூறுவது ஏற்புடையதல்ல!
தவிர, பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் கட்சி நிர்வாகி ஒருவர் அநாகரீகமாக நடந்து கொண்டது குறித்து முறையிட்டும், அவர் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
யாராக இருப்பினும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக திகழும் பத்திரிகையாளர்களின் சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் உரிமைகளையும் மதிக்க வேண்டும்.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.