• முகப்பு
  • district
  • திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற பட்டதாரி பெண் உறுப்பினர் பாஜகவில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு !

திமுக கட்சியை சேர்ந்த மாமன்ற பட்டதாரி பெண் உறுப்பினர் பாஜகவில் சேர்ந்ததால் பெரும் பரபரப்பு !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

காஞ்சிபுரம் நகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. 36-வது வார்டு அதிமுக வேட்பாளர் இறந்து விட்ட காரணத்தினால் அங்கு தேர்தல் நடத்தப்படவில்லை. அந்த ஒரு வார்டு தவிர மற்ற 50 வார்டுகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் 31 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 32 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது. சுயேச்சையாக வெற்றி பெற்ற ஆறு பேரில் 16 ஆவது வார்டு உறுப்பினர் எஸ்கேபி.சாந்தி சீனிவாசன் மற்றும் 46 வது வார்டு உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின் பெண் மேயராக திமுக கட்சியை சேர்ந்த மகாலட்சுமி யுவராஜ் தேர்வு செய்யப்பட்டார். மாநகராட்சி ஆணையராக நாராயணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் 147 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அந்த தீர்மானங்களை கேட்ட 46வது வார்டு திமுக கட்சியின் மாமன்ற பட்டதாரி பெண் உறுப்பினர் கயல்விழி சூசையப்பர் அதிர்ச்சியுற்றார். 46வது வார்டில் 1961 ம் ஆண்டே பேரறிஞர் அண்ணா காலத்தில் பாலாற்றில் 20 அடி ஆழத்தில் கிணறு வெட்டப்பட்டு அங்கிருந்து எந்தவித மோட்டார் இல்லாமல் நீரேற்றம் கிணற்றுக்கு தண்ணீர் வந்தடையும் விதத்தில் கட்டமைக்கப்பட்டது. அப்படி இருக்கும் பட்சத்தில் பாலாற்றில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டார் வேலை செய்யவில்லை எனக் கூறி எட்டு லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக மாமன்றத்தில் முறையிட்டார். மேலும் மக்கள் தொகை அதிகமுள்ள பின்தங்கிய பகுதியான *46 வது வார்டுக்கு ஒரு லட்சத்தி 90 ஆயிரம் ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கி விட்டு மிகவும் வளர்ச்சியடைந்த ,எந்த பிரச்சினையும் இல்லாத 48 வது வார்டுக்கு மட்டும் எப்படி இரண்டு கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கினீர்கள்* என கடும் வாக்குவாதம் செய்தார். அதேபோல் திமுக கட்சியை சேர்ந்த எஸ்கேபி சீனிவாசனின் மனைவி சாந்தி சீனுவாசன் , சந்துரு , சுரேஷ் , சுசிலா ஆகியோர் வார்டுகளுக்கு மட்டும் கோடிக்கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டு அதே திமுக கட்சியை சேர்ந்த எனக்கு மட்டும் எப்படி சொற்ப ரூபாய் ஒதுக்கீடு செய்து செய்கின்றீர்கள் என்ற கேள்வியை மாமன்றத்தில் எழுப்பினார். இதனால் அதிர்ச்சியுற்ற மேயர் , ஆணையர் , செயல் பொறியாளர் ஆகியோர் பதில் அளிக்க முடியாமல் சப்பைக்கட்டு கட்டினார்கள். மேயர் தலைமையில் 34 திமுக மாமன்ற உறுப்பினர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அதே திமுக கட்சியை சேர்ந்த பட்டதாரி பெண் மாமன்ற உறுப்பினர் மாமன்ற கூட்டத்திலேயே இந்த நிதி எல்லாம் முறைகேடாக செய்கின்றீர்கள் என ஆணித்தரமாக கூறியதால் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாயடைத்து திகைத்து நின்றார்கள். கயல்விழி சூசையப்பரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனம் சாதித்தனர். இதனைத் தொடர்ந்து கயல்விழி சூசையப்பர் வார்டுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் திமுக தலைமையிலான மேயர் மகாலஷ்மி யுவராஜ் மற்றும் ஆணையர் நாராயணன் ஆகியோர் செய்து தரவில்லை. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான கயல்விழி சூசையப்பர், திமுக கட்சி மக்களுக்கு எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்காது , மக்கள் வரிப்பணத்தை சில திமுக மாமன்ற உறுப்பினர்கள் கபளீகரம் செய்கின்றார்கள் எனக்கூறி கட்சியை விட்டு வெளியேறி தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் தன்னை இணைத்துக் கொண்டார். திமுக கட்சியில் நீண்ட காலமாக உள்ள எங்களுக்கு மாநகராட்சித் தேர்தலில் வாய்ப்பு கொடுக்காததால் சுயேச்சையாக நின்று பெரும் வெற்றி அடைந்து உள்ளேன். அப்படிப்பட்ட எனக்கும் பின்தங்கிய என் பகுதி மக்களுக்கும் திமுக அரசாங்கம் எந்த நன்மையும் செய்யவில்லை .எனவே மக்களுக்கு நன்மை செய்யாத திமுக கட்சியை விட்டு விலகி நான் முழுமனதுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டேன் என தெரிவித்தார். ஆளும்கட்சியின் மாமன்ற உறுப்பினரான கயல்விழி சூசையப்பர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால் திமுக கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended