பிரபல அரசு மதுபானங்களின் பெயரில் போலி மதுபான பாட்டில்கள் ,பிரபல சாராய வியாபாரிகள் தலைமறைவு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திமுக ஆட்சி அமைந்த நாள் முதலே காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெற்று வருகின்றது. அதிலும் குறிப்பாக போலி மதுபானங்கள் தயாரிப்பது, எரிசாயம் கடத்துவது, கள்ள சந்தையில் வெளி மாநில மதுபானங்கள் விற்பது, வீதி எங்கும் அரசு மதுபானங்களை கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்பது போன்ற செயல்களில் சமூக விரோதிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு சில திமுகவினர் செயல்பட்டு வருகின்றார்கள்.
இவர்களுக்கு காவல்துறையில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் துணை போவதால் இது போன்ற சம்பவங்கள் வெளி உலகத்துக்கு வருவதில்லை.
மதுவிலக்கு அமலாக்கத்துறை மத்திய நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் புயல் பாலசந்திரன் அவர்களுக்கு வந்த ரகசிய தகவலின் பெயரில் அவர் தலைமையில் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா, தலைமை காவலர் யுவராஜ் உள்ளிட்ட காவலர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் மாகரல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
மாகரல் சித்தாலப்பாக்கம் சாலை வழியே வேகமாக வந்த கூண்டு வைத்த மினி லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் பிரபல அரசு நிறுவன மதுபான பாட்டில்களின் பெயரில் போலியாக லேபிள் அடித்து போலி மதுபானங்கள் தயாரித்து விற்பனைக்கு கொண்டு செல்வது கண்டறியப்பட்டது.
மினி லாரியில் சோதனை இட்டபோது சுமார் 60 பெட்டிகளில் ஆறு லட்ச ரூபாய் மதிப்புள்ள 2880 போலி மதுபானங்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. மதுபான பிரியர்களிடையே மிக பிரபலமாக விற்பனையாகுகின்ற ஓல்டு செஃப் (Old Chef) மற்றும் டாப் ஸ்டார் (Topstar) போன்ற பெயரில் போலி லேபிள்கள் ஒட்டிய மதுபானங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட போலி மதுபானங்களை அருந்தினால் கண் பார்வை மங்கி குடல் வெந்து மரணத்தை எட்டுகின்ற நிலை ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்ற நிலையிலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் ஆங்காங்கே மறைமுகமாக நடைபெற்று வருகின்றது.
கடத்தப்பட்ட போலி மது பானங்களுடன் மினிலாரியை பறிமுதல் செய்து ஓட்டுனர் பாலமுருகன் என்பவரை கைது செய்து கலால் காவல் நிலைய காவலர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் விசாரணையில் போலி மதுபானம் தயாரித்ததில் , பிரபல சாராய வியாபாரி சுருட்டல் மணி மற்றும் அவருடைய மகன் மோகன்ராஜ்-க்கு தொடர்புள்ளது என தெரிய வருகிறது.
தலைமறைவாக உள்ள சுருட்டல் மணி மற்றும் மகன் மோகன்ராஜ் ஆகியோர்களை கலால் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றார்கள்.
காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த்.