பொதுமக்களின் உயிரோடு விளையாடும் மின்சாரவாரியம்:
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர்-திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மார்க்கத்தில் பருத்திச்சேரி என்ற பகுதியில் உள்ள உயரழுத்த மின்மாற்றி எந்தநேரத்திலும் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்துவருவதை கண்டுகொள்ளாத மின்வாரியத்தின் அலட்சியபோக்கிற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு வீசிய கஜா புயலில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மார்க்கத்தில் இருந்து ஏராளமான மின்கம்பங்கள், மின்மாற்றிகள் கடுமையாக சேதம் அடைந்தன.
அப்போது தமிழகத்தில் ஆட்சிபொறுப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் மின்சாரம் வழங்குவதாக கூறி தரமற்ற கான்கீரிட் மின்கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை ஒருசில அடி ஆழத்தில் பள்ளம்தோண்டி புதிதாக நிறுவி அதன் மூலம் கடந்த அதிமுக அரசு பெரும் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டது.
இந்நிலையில் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலை மார்க்கத்தில் மணலி ஊராட்சிக்கு உட்பட்ட பருத்திசேரி என்ற பகுதியில் இருந்துவரும் உயரழுத்த மின்கம்பிகளை தாங்கியுள்ள மின்மாற்றி அடிபகுதி சிதைந்துள்ள நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக சாய்ந்து எந்தநேரத்திலும் கீழே விழும் அபாய நிலையில் இருந்துவருகிறது.
மேலும் இத்தயை உயரழுத்த மின்மாற்றியினையொட்டி பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள குளத்தில் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி; பயன்படுத்தி வருகின்றனர். இதுதவிர இக்குளத்தினை சாலை மார்க்கத்தில் செல்லும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இத்தகைய உயரழுத்த மின்மாற்றியினை சீரமைத்து பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் அளித்திடவேண்டி மின்வாரிய உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் பருத்திச்சேரி கிராமமக்கள் புகார் தெரிவித்தபோதிலும் இதுவரை எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியபோக்குடன் அதிகாரிகள் இருந்துவருகின்றனர்.
வரும் 10 தினங்களுக்குள் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிடில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் பருத்திச்சேரி மக்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி: தினேஷ்பாபு, பருத்திச்சேரி.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.