பெரம்பலூரில் உள்ள 57 தனியார் பள்ளிகளில் உள்ள 364 வாகனங்களை மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 57 பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியர்களை ஏற்றி செல்லும் 364 வாகனங்கள் தமிழ்நாடு அரசு விதித்துள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றி இயக்கப்படுவது குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி அவர்கள் வருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி, வட்டார போக்குவரத்து அலுவலர் திரு. கனேசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் ஆகியோர் முன்னிலையில் தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்கள் முழு உடல் தகுதியுடன் கூடிய உரிமம் பெற்றிருக்க வேண்டும், ஓட்டுநர்களுக்கு தனி கிரில் அமைத்து பள்ளி குழந்தைகள் அவர் அருகில் செல்ல முடியாத அளவில் இருக்க வேண்டும் ஓட்டுநர்கள் கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும், பயணத்தின்போது கட்டாயம் உதவியாளர் இருக்க வேண்டும், பள்ளி வாகனத்தின் படிக்கட்டுகள் அரசு நிர்ணயித்த அளவில் இருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டி, தீயணைப்பான் கருவி வாகனத்தில் கட்டாயம் இருக்க வேண்டும், அவசர கால கதவு நல்ல நிலையில் இயங்கும்படி அமைக்கப்பட்டிருக்க வேண்டும், பள்ளி வாகனத்தின் பின்புறம் காவல் நிலைய தொலைபேசி எண், பள்ளி நிர்வாகத்தின் தொலைபேசி எண் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலகத்தின் தொலைபேசி எண் கட்டாயம் எழுதப்பட்டு இருக்க வேண்டும்.
வாகனத்தில் வேக கட்டுபாட்டு கருவி பொருத்திருக்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை பின்பற்றி வாகனங்கள் இயக்குவது குறித்து ஆய்வு செய்வதற்கு மாவட்ட அளவிளான குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இக்குழுவானது வருவாய் கோட்டாட்சியர் அவர்களை செயல் அலுவலராக கொண்டு மாவட்ட துணை கண்காணிப்பாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டாரப்போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் ஆகியோர்களை உறுப்பினர்களாக கொண்டது.
முதற்கட்டமாக இன்று (02.07.2022) 175 பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் 150 வாகனங்களுக்கு தகுதிச்சான்றிதழ்களும், 20 பேருந்துகளில் சில குறைபாடுகளை கண்டறிந்து 7 நாட்களுக்குள் அதனை சரிசெய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 வாகனங்களுக்கான உரிமம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் வட்டார போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜெயராஜ், மாவட்ட தீயணைப்புத்துறை நிலை அலுவலர் ந.உதயகுமார் மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்பசாமி, கண்காணிப்பாளர் வேலாயுதம், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.