• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.

முத்தையா

UPDATED: May 23, 2023, 9:08:47 PM

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா (23.05.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

குமாரபாளையம் நகராட்சிக்கு சொந்தமான எடப்பாடி சாலையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021 – 2022 ன் கீழ், ரூ.278.24 இலட்சம் மதிப்பீட்டில் தினசரி சந்தையினை மேம்படுத்தும் பணியினையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2022 – 2023 ன் கீழ், வாரசந்தை வளாகத்தில் ரூ.192.00 இலட்சம் மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டும் பணியினையும்,

தேசிய நகர்புற சுகாதார திட்டம் 2021 – 2022 ன் கீழ், மாரக்காள்காடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பகுதியில் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர் சுகாதார நல மையம் கட்டும் பணியினையும், புத்தர் தெரு நகராட்சி துவக்கப்பள்ளியில் ரூ.9.00 இலட்சம் மதிப்பீட்டில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மைய சமையல் கூடம் கட்டும் பணியினையும்,

அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ், ரூ.19.00 இலட்சம் மதிப்பீட்டில் முராசு கூட்டையினை தூர் வாரி கரை அமைத்து, கம்பி வேலி அமைக்கும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது வாரச் சந்தைக்கு அணுகு சாலை அமைக்க வேண்டுமெனவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டுமெனவும், அந்த அறிவு சார் மையத்தில் உட்கட்ட்மைப்புடன் தளவாடங்களுடன் அமைத்திட வேண்டுமெனவும் மேற்கண்ட பணிகளை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் விரைந்து முடித்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென நகராட்சி பொறியாளருக்கு அறிவுறுத்தினார். 

முன்னதாக குமாரபாளையம் நகராட்சியில் உள்ள கடைகள், தினசரி சந்தை உள்ளிட்ட இடங்களில் பிளாஸ்டிக் பை பயன்படுத்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டு பிளாஸ்டிக் பை பயன்படுத்தும் கடைகள் மீது அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பையினை பயன்படுத்துவது அவசியம் குறித்து கடை உரிமையாளர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து நகராட்சி முழுவதும் துணிப் பைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி பொறியாளருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் எஸ். உமா அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் (பொ) ராஜேந்திரன், நகராட்சி பொறியாளர்கள், நகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended