திருவாரூரில் இ சேவை மையத்தில் அதிரடியாக நுழைந்து மாவட்ட ஆட்சியர் திடீர் ரெய்டு.
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
திருவாரூர் மாவட்டம் ஏழைகள் விவசாயக் கூலி தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டம்.அரசு அலுவலகங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெறுவதற்கு நீண்ட நேரம் காத்திருக்கக்கூடிய சூழ்நிலை நிலவியதால் தனியார் இ சேவை மையங்களில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை எளிதாக பெற்றுக் கொள்வதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் அரசு நிர்ணயம் செய்த தொகையினை தனியார் இ சேவை மையங்களில் செலுத்தி பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திருவாரூர் விளமல் பகுதியில் இயங்கி வரும் அன்னை சிஸ்டம்ஸ் என்கிற தனியார் இ சேவை மையத்தில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கும், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான வருமானச் சான்றிதழ் சாதி சான்றிதழ் இருப்பிட சான்றிதழ் இறப்பு சான்றிதழ் வாரிசு சான்றிதழ் விதவை சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு அரசு நிர்ணயித்த தொகையான 60 ரூபாயை விட அதிக தொகை வசூலிப்பதாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு புகார் வந்ததையடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அதிரடியாக அன்னை சிஸ்டம்ஸ் தனியார் இ சேவை மையத்தில் நுழைந்து சோதனை நடத்தினார்.
இதில் அந்த தனியார் இ சேவை மையத்தில் எந்த சேவைக்கு எவ்வளவு பணம் வசூலிக்கப்படும் என்கிற உரிய அறிவிப்பு பலகை ஏதும் இல்லை.மாவட்ட ஆட்சியர் அங்கிருந்த ஆவணங்களை சோதனை செய்தார் அங்கு சான்றிதழ் விண்ணப்பிக்க வந்திருந்த பொது மக்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து திருவாரூர் வட்டாட்சியர் நக்கீரன் தலைமையில் இந்த தனியார் இ சேவை மையத்தில் உள்ள ஆவணங்களை கைப்பற்றி உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
மேலும் அனைத்து இ சேவை மையங்களிலும் வசூலிக்கப்படும் தொகை குறித்த அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
உரிய விசாரணைக்கு பின் இந்த தனியார் இ சேவை மையம் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.