- முகப்பு
- மாவட்டச் செய்தி
- தஞ்சையில் 30.50 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தஞ்சையில் 30.50 கோடியில் மினி டைடல் பூங்கா கட்டுமான பணியை காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ஆர்.ஜெயச்சந்திரன்
UPDATED: May 19, 2023, 2:22:46 PM
தமிழ்நாட்டின் தகவல் தொழில் நுட்பத் துறை வளர்ச்சியின் அடித்தளமாகவும், அடையாளமாகவும் திகழும் டைடல் பூங்கா நிறுவனம், 1996-2001 ஆட்சிக் காலத்தில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியால் நிறுவப்பட்டது.
இது, மாநிலம் முழுவதும் தகவல் தொழில் நுட்பத்துறையில் மாபெரும் வளர்ச்சி ஏற்பட வித்திட்டது.
தமிழ்நாட்டில் தகவல் தொழில் நுட்பத்துறையின் சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தும் வகையில், தற்போது இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல் 1,00,000 சதுர அடி பரப்புள்ளதாக மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இவை, டைடல் பூங்கா நிறுவனம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்துடன் இணைந்து டைடல் நியோ என்ற சிறப்பு நோக்க நிறுவனம் மூலமாக அமைக்கப்பட்டு வருகின்றன.
விழுப்புரம் மற்றும் திருப்பூர் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.06.2022 அன்றும், வேலுார் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 18.02.2023 அன்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அவற்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தூத்துக்குடி, தஞ்சாவூர், மற்றும் சேலம் மினி டைடல் பூங்காக்களின் கட்டுமான பணிகள் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
அதைத் தொடர்ந்து தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் சரவணகுமார், உள்ளிட்ட கலந்து கொண்டனர்.