கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் “கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி வட்டாரம், பெருந்தரக்குடி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது…
தமிழ்நாட்டில் இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழக முழுவதிலும் உள்ள அனைத்து கிராமங்களிலும் ஒட்டுமொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கிட அனைத்து துறைகளின் ஒருங்கிணைப்புடன் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் என்ற பெருந்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வட்டார அளவில் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதாரத்துறை, எரிசக்தித்துறை, கைத்தறி, கைத்திறன் துணிநூல் மற்றும் கதர்த்துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைந்து கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டு, அனைத்து கிராமங்களும் ஒட்டுமொத்த வளர்ச்சி அடைந்து தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றப்படும்.
இத்திட்டத்தின் நோக்கங்களாக, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைப்பொருட்களை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்துதல், நுண்ணீர் பாசன முறையயை பின்பற்றுதல், கால்நடைகளின் நலன் காத்து பால் உற்பத்தியை பெருக்குதல், வருவாய்த்துறையின் மூலம் புதிய பட்டா ஃ பட்டா மாறுதல் வழங்குதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிகளவு பயிர்க்கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீர் வழித்தடங்களை தூர்வாருதல் உள்ளிட்டவைகளாகும்.
அதனடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டில் 60
கிராமங்களில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் ஒரு குடும்பத்திற்கு ரூ.150 மதிப்பில் மூன்று தென்னங்கன்றுகள் வழங்கப்படும்.
உளுந்து சாகுபடியை ஊக்குவிக்க இடுபொருட்கள் ஒரு ஹெக்டேருக்கு ரூ.500 மான்யம் வீதம் 10 ஹெக்டேருக்கு ஒரு கிராமத்திற்கு வழங்கப்படும். தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் ரூ.2000 மானியத்தில் 10 எண்கள் கைத்தெளிப்பான்கள் வழங்கப்படும்.
தோட்டக்கலைத்துறையின் மூலம் வீட்டுத்தோட்டம் அமைத்திட 8 வகையான காய்கறி விதைகள் மற்றும் 2 கி மண்புழு உரம் அடங்கிய தொகுப்பு 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க அங்கக இடுபொருட்கள் ரூ5000 மதிப்பில் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
75 சதவீத மானியத்தில் நெகிழிக்கூடைகள் மற்றும் பயிர் பாதுகாப்பு செய்ய ஏதுவாக பிளாஸ்டிக் ட்ரம் ஆகிய உபகரணங்கள் வழங்கப்படும். மரக்கன்றுத்தொகுப்பு ஒன்றுக்கு ரூ.100 மதிப்பில் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும். இத்திட்டத்தினை அனைத்து தரப்பு விவசாயிகளும் அறிந்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தார்.
அதனைதொடர்ந்து, பண்ணை இயந்திர கருவிகள், தென்னைக்கன்று, கை தெளிப்பான், காய்க்கறி விதைகள் மற்றும் மண்புழு உரங்கள், கால்நடைபராமரிப்புத்துறையின் சார்பில் கால்நடைகளுக்கான புல் அறுக்கும் கருவிகள் என 28 விவசாயிகளுக்கும், 3 மகளிர் சுய உதவிக்குழுவிற்கும் கடனுதவியும் ரூ. 15 லட்சத்து 30 ஆயிரத்து 40 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குநர் ரவீந்தீரன், மாவட்ட ஊராட்சித்துணைத்தலைவர் கலியபெருமாள், கொரடாச்சேரி ஒன்றிய துணைப்பெருந்தலைவர் திரு.ஆர்.பாலசந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாழை ஜே.ராஜேஸ்வரி ஜெகஜீவன் ராம், ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தி கவியரசன் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் செய்தியாளர் இளவரசன்.