600 ஆண்டுகள் பழமையான சீனிவாசப் பெருமாள் மற்றும் செல்ல முத்து மாரியம்மன் ஆலய குடமுழுக்கு விழா
து.இளவரசன்
UPDATED: May 14, 2023, 10:14:07 AM
திருவாரூர் மாவட்டம் கமலாபுரம் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் 600 ஆண்டுகள் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் ஆலயம் மற்றும் செல்லமுத்து மாரியம்மன் ஆலயம் அருகருகே அமைந்துள்ளது.
இந்த இரு ஆலயங்களின் திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.செல்லமுத்து மாரியம்மன் ஆலயத்தில் பெரியாச்சி மதுரைவீரன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அமைந்துள்ளன.
_______________________________________________________
கும்பாபிஷேகம் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும்
_______________________________________________________
அருகருகே உள்ள இந்த ஆலயங்களின் குட முழுக்கு விழா இன்று நடைபெற்றது.முன்னதாக கடந்த மே 11 அன்று விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் இந்த குடமுழுக்கு விழா தொடங்கியது.
தொடர்ந்து மூன்று காலை யாகசாலை பூஜைகள் நடைபெற்ற முடிந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து மகா பூர்ணாகதி நிறைவுற்று கட புறப்பாடு நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் புனித கடங்களை தலையில் சுமந்தபடி மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலயத்தை வலம் வந்து விமானத்தை வந்தடைந்தனர்.
தொடர்ந்து முதலாவதாக சீனிவாசா பெருமாள் ஆலய விமானத்திற்கு கடத்தில் உள்ள புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்பு கலசத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனையடுத்து செல்லமுத்து மாரியம்மன் ஆலய விமானத்திற்கு கடங்களில் கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊற்றி குடமுழுக்கு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஆலயத்தை சுற்றி இருந்த பக்தர்கள் மீது கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டு விரைவாக அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் அருள் வந்து ஆடினார் கையில் இருந்த வேப்பிலையை தின்றபடி எனக்கு சந்தோஷமாக இருக்கிறது என்று கைதட்டி விழியை உருட்டி ஆடினார்.
அருகருகே உள்ள இந்த இரு கோயில்களின் குடமுழுக்கு விழாவிற்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.